குக்கருக்கும் ஆசை இரட்டை இலைக்கும் ஆசை... ஆனாலும் குக்கர்தான் இனி கோலோச்சும்...! தினகரன் திட்டம்!
குக்கரா...? இரட்டை இலையா? என்று வந்தால், குக்கர் பேரிலேயே ஆசையை வைத்துள்ளார் டிடிவி தினகரன்.
குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, ஆர்.கே.நகரில் பெண்கள் பலரையும் கவர்ந்து குக்கர் மூலமே வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். இதனால், அவருக்கு குக்கர் மீதான பாசம் அதிகமாகிவிட்டது. ஆனாலும் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை கதையாக இரட்டை இலையையும் விடத் தயாராக இல்லை.
வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தற்போது கூறி வருகிறார் தினகரன். ஆனாலும், இரட்டை இலையை மீட்போம் என்றும் கோஷமிட்டு வருகிறார்.
தனக்கு தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ள தினகரன், அ.தி.மு.க. அம்மா பெயரை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். எனவே, அதிமுக., என்ற பெயரை இழப்பதற்கு அவர் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறியதால், எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று தினகரன் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று நீலகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. அம்மா பெயரை பயன்படுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம். சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் எங்களுடன் இணைவார்கள். தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை உள்ளது. அதை சமாளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினார்.
அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் குக்கரிலேயே போட்டியிட எண்ணம் உள்ளதாகக் கூறினார் டிடிவி தினகரன். குக்கர் இப்போது அவருக்கு ராசியான சின்னம் ஆகிவிட்டது போலும்!