தினகரன் உளவாளிக்கு செமத்தியான கவனிப்பு : நேரடி யுத்தத்திற்கு முண்டா தட்டும் எடப்பாடி!
முதல்வர் பழனிசாமி இன்னொரு பன்னீராக உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, அவ்வப்போது முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார் தினகரன்.
ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயித்தால், தமது முதல்வர் பதவிக்கு, தினகரன் ஆப்பு வைத்து விடுவார் என்று அஞ்சுகிறார் எடப்பாடி.
அதனால், ஒருவரை ஒருவர் மாறி, மாறி கண்காணித்துக் கொண்டே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசும் அனைத்து விஷயங்களும், தினகரனுக்கு எப்படி எட்டுகிறது என்று சந்தேகித்துக் கொண்டே இருந்தார் எடப்பாடி.
பின்னர்தான் தெரிந்தது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, தினகரனின் பழைய நண்பர் ஒருவர் மூலமே, தமது நடவடிக்கைகளை அவர் தெரிந்து கொள்கிறார் என்று.
அதை அடுத்து, அவர் மீது ஏதாவது வழக்குகள் இருக்கிறதா? என்று சேலம் போலீசாரை விசாரித்திருக்கிறார் எடப்பாடி.
அப்போது, சேலத்தில் கட்டப்பட்டு வரும் பெரிய மேம்பாலத்திற்கு, தண்ணீர் எடுக்கக் கூடாது என்று போராடிய போது, அவர் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர் ஒன்று இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர்.
அந்த எப்.ஐ.ஆர் அடிப்படையில், அவர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு, மயங்கி விழும் அளவுக்கு செமத்தியாக கவனிக்கப்பட்டு இருக்கிறார்.
அதன் பின்னர், காவல் துறைக்கு பயந்து, அங்குள்ள மருத்துவமனை எதுவும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளன. வேறு வழியின்றி அவர் வெளி மாநிலம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர், அவர் அதை எல்லாம் ஒன்றுவிடாமல் தினகரனிடம் அழாத குறையாக சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அதை கேட்டு, தினகரன் ரொம்பவும் அப்செட் ஆகி இருக்கிறார்.
சரி, நீங்கள் எதற்கும் கவலைப்படாமல், உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் கூறி இருக்கிறார்.
மேலும், நீங்கள் நடந்த அனைத்தையும், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கமாக கூறுங்கள். அதன் பேரில் நான் அவரை ஒரு கை பார்த்து கொள்கிறேன் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
அந்த பத்திரிகையாளர் சந்திப்பை, அடிப்படையாக வைத்து, எடப்பாடிக்கு ஆப்பு வைக்க நாள் குறிக்கப்பட்டு வருவதாக, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், தினகரனோடு நேரடியாக மோதுவதற்கு, எடப்பாடியும் தயாராக இருக்கிறார். அதன் காரணமாகவே, தினகரன் ஆதரவாளர் என்று தெரிந்தும் அவர் துணிந்து செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த கையோடு, பல முட்டல், மோதல்கள் ஏற்பட்டு, முதல்வர் மாற்றமோ அல்லது ஆட்சி மாற்றமோ நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.