கலைஞர் ஒரு மணி நேரம் நினைவாற்றல் பெற்றால் போதும்..! இந்த ஆட்சி கலைக்கப்படும்..! புகழேந்தி புகழாரம்..!
திமுக தலைவர் கருணாநிதி ஒரு மணி நேரம் நினைவாற்றல் பெற்றால் போதும், இந்த ஆட்சி கலைக்கப்படும் என தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நினைவாற்றலுடன் இருந்து தீவிர அரசியலில் இருந்திருந்தால், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அணிகள் பிரிந்தபோதே ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் சாமானிய மக்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, சென்னையில் மழையை எதிர்கொள்ள அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி ஒரு மணி நேரம் நினைவாற்றல் போதும்; இந்த ஆட்சி கலைக்கப்படும் என அதிரடியாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்து குறித்து, அவர் விளக்கமளிக்க வேண்டும் என புகழேந்தி வலியுறுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தல், ஆர்.கே.இடைத்தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க தினகரன் அணி தயாராக உள்ளதாகவும் பழனிசாமி தலைமையிலான அரசுதான் தேர்தலை சந்திக்க பயப்படுவதாகவும் புகழேந்தி விமர்சித்தார்.