அமைச்சர் பதவி மட்டும் இல்லைனா அவருலாம் யாரு..? அவரு பேசுறதுக்குலாம் என்கிட்ட கருத்து கேட்காதீங்க.. தெறிக்கவிட்ட தினகரன்
அமைச்சர் என்பதற்காக மட்டுமே வேலுமணி கூறும் கருத்துக்களுக்கு என்னிடம் பதில் கேட்காதீர்கள் என செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை விமர்சிக்கும் தினகரன், எம்பியாக இருந்தபோது எத்தனை முறை இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வரும் துணை முதல்வரும் வாரிசு அடிப்படையில் உயர்பொறுப்புக்கு வந்தவர்கள் அல்ல; அடிமட்டத்தில் இருந்து உயர் பொறுப்புக்கு வந்தவர்கள் என சட்டமன்றத்தில் வேலுமணி பேசினார்.
காயிதே மில்லத்தின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அமைச்சர் வேலுமணியின் கருத்து குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், என்னை எம்பி ஆக்கியவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் அவர் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆட்சியாளர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி கூட பேசவில்லை. அதனால் தான் இந்த அரசை நான் விமர்சித்தேன்.
அதற்காக அமைச்சர் வேலுமணி பேசுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் பதவி மட்டும் இல்லையென்றால், அவருக்கு மக்கள் மத்தியில் மதிப்பே கிடையாது. அதனால் அவர் பேசுவது தொடர்பாக எல்லாம் என்னிடம் கருத்து கேட்காதீர்கள் என தினகரன் தெரிவித்துவிட்டார்.