தினகரன் எல்லாம் எனக்கு போட்டியா? கூல் தினாவை வெறுப்பேத்திய ஜெ.தீபா!
ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெ. அண்ணன் மகள் ஜெ.தீபா. கடந்த முறை வழங்கிய படகு சின்னத்தையே தான் கேட்டுள்ளதாகவும், டிடிவி தினகரனை தனக்கு போட்டியாளராக நினைக்கவில்லை என்றும் தீபா கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினமே வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டனர். இவர்களை தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிட பெரும்பாலோனோர் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த முறை தேர்வு செய்யப்படவில்லை. அதனால் தற்போது கரு நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் சுயேட்சையாக நடிகர் விஷாலும் களம் காண்கிறார். கடந்த முறை போட்டியிட்ட ஜெ.தீபா இந்த முறையும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தீபா இன்று தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, ஜெ.தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த ஜெயலலிதாவுக்காக தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீபா வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த முறை வழங்கிய படகு சின்னத்தையே தான் கேட்டுள்ளதாகவும், ஆனால் எந்த சின்னத்திலும் போட்டியிடுவேன் என்றும் கூறினார். பண பலம், அதிகார பலம் இன்றி தாம் போட்டியிடுவதாக கூறினார்.
கடந்த முறை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் இம்முறை போட்டியிட அனுமதித்தது தவறு என்றும் டிடிவி தினகரனை தனக்கு போட்டியாளராக நினைக்கவில்லை என்றும் தீபா கூறினார்.