ஆளும் கட்சியை அலறவிட மாஸ்டர் ஸ்கெட்ச்.... ஆடிட்டர்களுடன் சீக்ரெட் மீட்டிங்! தெறிக்கவிடப்போகும் தினா
இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளதால் தனது ஆடிட்டர்களுடன் சீக்ரெட் மீட்டிங்குகளை அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு ஐந்து நாட்களாக சென்னையில் உள்ள டி.டி.வி தினகரன் வீட்டின் முன்பு கட்சிக்காரர்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அண்ணனை பார்க்க யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மிக முக்கியமான நிர்வாகிகள் கூட தினகரனை சந்திக்க அடையாறு வீட்டுக்கு வருவதில்லை.
தலைபோகிற காரியம் என்றால் தினகரன் உதவியாளர் ஜனா லைனுக்கு அவர்கள் செல்கின்றனர். அதன் பிறகு அவசியம் என்றால் நிர்வாகிகளுடன் தினகரன் பேசுகிறார். திடீரென தினகரன் தன்னை வீட்டுக்குள் சிறை வைத்துக் கொண்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் அவரது வீட்டில் நடைபெறும் ரகசிய மீட்டிங்குகள் தான் என்கிறார்கள்.
ரகசிய மீட்டிங் என்றால் தினகரன் தனது ஆடிட்டர்கள் மற்றும் போயஸ் கார்டன் துடிப்பாக இருந்த போது கணக்கு வழக்குகளை கவனித்து வந்த ஆடிட்டங்களை தனது வீட்டிற்கு அழைத்து விடிய விடிய பேசுகிறாராம். அதிலும் மிக முக்கியமாக பண விவகாரம் குறித்து தான் ஆலோசனை மணிக்கணக்கில் நீடிப்பதாக சொல்கிறார்கள். 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்பதால் பணத்தை கொட்டி செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் வருமான வரித்துறை மட்டும் இன்றி அமலாக்கத்துறையும் கண்கொத்தி பாம்பாக தினகரனை கண்காணித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தினகரனின் பினாமிகள், ஆடிட்டர்களும் கூட 24 மணி நேர கண்காணிப்பிலேயே உள்ளனர். இவற்றை எல்லாம் மீறி பணத்தை வெளியே எடுக்க முடியுமா? என்பது தான் ஆலோசனைக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நான்கு ஐந்து நாட்களாக ஆலோசனைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.