அமைச்சர் ஆவதற்கு முன்பு தெருக்கோடி.. இப்போ பல கோடி!! முன்னாள் அமைச்சரை அலறவிட்ட தினகரன்
ஆட்சியாளர்களை எதிர்த்து அரசியல் செய்துவரும் தினகரன், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட பயணத்தில் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்த தினகரன், இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை தஞ்சாவூரில் நேற்று தொடங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தினகரன், குக்கர், மிக்ஸி, கறவை மாடுகள் ஆகியவற்றை வழங்கினார். பெரும்பாலும் குக்கரே அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய தினகரன், வழக்கம்போலவே ஆட்சியாளர்களை தயவு தாட்சன்யம் இல்லாமல் விமர்சித்தார். அப்போது பேசிய தினகரன், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிற வகையில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் அதை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
நிதி இல்லை என கூறும் ஆட்சியாளர்கள், எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை கேட்காமலேயே உயர்த்தியது ஏன்? அப்படி உயர்த்தினால்தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால்தான். பாஜகவின் கிளை நிறுவனமாகத்தான் பழனிசாமி அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்தது யார்? என்பது அவருக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது அவருடைய சொத்து மதிப்பு என்ன? தற்போது அவரிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது? அப்பொது எப்படி இருந்தார்? இப்போது எப்பரி இருக்கிறார்? வரும் காலத்தில் வைத்திலிங்கம் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார் என தினகரன் எச்சரித்தார்.