dinakaran bargains with ops cadres
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயித்து விட்டால் ஆட்சிப் பொறுப்புக்கு தலைமை ஏற்கலாம் என்ற எண்ணத்தில், வேட்பாளராக களம் இறங்கி விட்டார் தினகரன்.
ஆனால், தொகுதி நிலவரம் என்னவோ, திமுகவுக்கும், பன்னீர் அணிக்குமே சாதகமாக உள்ளது.
தொகுதிக்குள் வேலை பார்ப்பதற்கு கூட ஆள் இல்லை, வெளியூர் ஆட்களை நம்பியே பிரச்சாரத்திற்கு போகவேண்டியுள்ளது. ஆதரவை விட பல இடங்களில் எதிர்ப்பே அதிகம் தென்படுகிறது.

இதனால், கெளரவமாக ஒட்டு வாங்குவது கூட சிரமம் என்று அவருக்கு தோன்றுகிறது. ஆனால் மறுபக்கம் உள்ளூர் வேட்பாளர் என்ற கோதாவில் மதுசூதனன் வெளுத்து வாங்குகிறார்.
இந்த நிலைமையை எப்படி சரி செய்வது? என்று யோசித்த தினகரன், பன்னீர்செல்வம் அணியில் உள்ள ஆட்களை விலை கொடுத்து வாங்க திட்டம் போட்டு செயல் படுத்த ஆரம்பித்தார்.
பொதுமக்களைப் பற்றியோ, வாக்காளர்கள் பற்றியோ கவலையில்லை, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குங்கள் அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்.

பணம்தான் பத்தும் செய்யுமே, அதனால் அந்த திட்டம் சற்று பலன் அளிக்க தொடங்கி விட்டது.
அதைக்கண்டு மிரண்டு போன பன்னீர் அணி, உன்னிடம் மட்டும்தான் பணம் இருக்கிறதா? என்னிடமும்தான் இருக்கிறது என்று, பதிலுக்கு பன்னீர் தெளிப்பது போல் பணத்தை தெளித்து வருவதாக தகவல்.
தற்போதைய நிலையில் கொளுத்தும் வெயில் சுட்டெரிப்பதையும் மீறி, கொட்டும் பண மழையில் ஆர்.கே.நகரில் பலரது உடலும், மனமும் குளிர்ந்து வருவதாகவே சொல்லப்படுகிறது.
