முடிவுக்கு வந்ததா பாஜக கொடுத்த டாஸ்க்..? இறுதிக் கட்டத்தை நோக்கி ’பிக்பாஸ்’ மய்யம்..!
இது எல்லாம் திட்டமிட்ட விலகல். பாஜக கொடுத்த டாஸ்க் முடித்துவிட்டு ஒவ்வொரு ஆளாக விலகி வருகிறார்கள்’’எனக் கூறுகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் தோல்விக்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து விலகி வருகிறார்கள். கட்சி ஆரம்பித்த போது கமலுடன் உடன் இருந்தவர்களான பேராசியர் கு.ஞானசம்பந்தன், உயர்மட்டக்குழுவில் இருந்த சுகா (நெல்லை கண்ணனின் மகன்) உள்ளிட்டோர் ஆரம்ப காலத்திலேயே கட்சியில் இருந்து விலகி விட்டனர். அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டது மக்கள் நீதி மய்யம்.
ஆனால், சட்டமன்ற தேர்தலில் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் ஓரிடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றிபெறவில்லை. தேர்தலுக்கு முன்பே வழக்கறிஞர் ராஜசேகர், சி.கே.குமரவேல், கடலூர் மாவட்ட பொறுப்பாளர் டி.வெங்கடேசன், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா என பலரும் கட்சியை விட்டு விலகினர்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, துணைத்தலைவராக இருந்த பொன்ராஜ், கமீலா நாசர், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா, உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து விலகினர். இன்னையில் திடீர் திருப்பமாக துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது கமல்ஹாசனை அதிர்ச்சியுறச் செய்தது. இதனையடுத்து கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திருச்சி முருகானந்தமும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், ஆரம்பம் முதலே மக்கள் நீதி மய்யம் கட்சி பாஜகவின் பி டீம் எனக் கூறப்பட்டு வந்தது. தேர்தல் வரைதான் இந்த கட்சி இருக்கும் எனவும் கூறினார்கள். அதை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் முடிந்தவுடன் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். தற்போது கமல் கட்சியில் இருக்கும் ஒரே நிர்வாகி என்றால் அது சினேகன் மட்டும் தான்.
கமலுக்கு வழிகாட்டியாக விஜய் டிவி மகேந்திரன் இருப்பதாக கூறியே மகேந்திரனும், முருகானந்தமும் குற்றம்சாட்டினார்கள். இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் வகையில் கமல் கட்சி நடவடிக்கைகள் அமைந்து விட்டன. பிக்பாஸை வழி நடத்துவதைப்போல விஜய் டிவி மகேந்திரன் கமல் கட்சிக்கும் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்து கட்சியில் இருந்து ஒவ்வொரு ஆளாக எலிமினேட் செய்து விட்டு, பிக்பாஸ் வீட்டைப்போல கமல் கட்சி வீட்டின் கடைசி உறுப்பினர் என்ற அந்தஸ்தை கவிஞன் சினேகன் பிடித்திருக்கிறார். இது எல்லாம் திட்டமிட்ட விலகல். பாஜக கொடுத்த டாஸ்க் முடித்துவிட்டு ஒவ்வொரு ஆளாக விலகி வருகிறார்கள்’’எனக் கூறுகின்றனர்.