"முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் செய்தபோது கேலி, கிண்டல் செய்தார்கள். ஆனால், அப்போது எடப்பாடி பழனிச்சாமி ரூ.36,000 கோடி முதலீடை பெற்றார்."

அண்ணாமலைக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை சொல்கிறார். அதற்கு அந்தத் துறை அதிகாரிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மாறிய நிலைமை

மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரை மாநகராட்சி தேர்தலில் 70 சதவீத அளவுக்கு அதிமுக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், கடைசி மூன்று நாட்களில்தான் நிலைமை மாறிவிட்டது. இல்லை என்றால், அதிமுக வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கும். மதுரை மாநகராட்சி மன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்படும். கவுன்சிலர்கள் சரி இல்லாதபட்சத்தில் மாற்று நிர்வாகி தேர்வு செய்யப்படுவார்கள். மாமன்றத்தில் மதுரை மக்களுடைய குரலை அதிமுக கவுன்சிலர்கள் பிரதிபலிப்பார்கள். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. 

திமுக இரட்டை வேடம்

அதேபோல அம்ரூட் திட்டம் மூலம் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டமும் தற்போது கிடப்பில் கிடக்கிறது. இது அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், திமுக அமைச்சர்கள் குறைகளை மட்டுமே கூறுகிறார்கள். எனவே, இந்தத் திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அதிமுக அரசோ, அதிமுக அமைச்சர்களோ கொண்டு வந்த திட்டம் கிடையாது. இந்தத் திட்டத்தின்படி மத்தியில் இருந்து வரும் நிபுணர் குழு ஆய்வு செய்துதான் முடிவெடுப்பார்கள். இதில் தனிநபர் யாரும் முடிவெடுக்க முடியாது. தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. கேரளாவை போல வெளிப்படையாக பொது வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் அறிவித்திருக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் செய்தபோது கேலி, கிண்டல் செய்தார்கள். ஆனால், அப்போது எடப்பாடி பழனிச்சாமி ரூ.36,000 கோடி முதலீடை பெற்றார். இன்று முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றது முதலீடு பயணமா? அவருடன் சென்று இருக்கும் நபர்களை எல்லாம் பார்த்தால் சுற்றுலா போலத்தான் தோன்றுகிறது. தமிழன் என்ற முறையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வர வேண்டும். முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் முதலீடு ஈர்த்தால் சந்தோஷம்தான்.

வழக்கு போடுவதா?

பாஜக தலைவர் அண்ணாமலை வளர்ந்து வரும் ஒரு கட்சியின் இளைய தலைவர் ஆவார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் திமுக அரசுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார். அவருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை சொல்கிறார். அதற்கு அந்தத் துறை அதிகாரிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திமுக அரசு வழக்குப் போடுவதாக சொல்வது சரி அல்ல” என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.