ஆக, ஒரு பென் ட்ரைவை மோடியிடம் கொடுப்பதற்காகவே தான் சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்துள்ளதாக ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்டின் சில பகுதிகள் கூறுகின்றன.  

பிரதமர் மோடி - சீன அதிபர் தமிழகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வாட்ஸ் -அப்பில் ஒரு தகவல் உலா வருகிறது. தயவு செய்து சிரிக்காமல் படித்து தொலைக்கவும்... ’பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும்போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் யார் எவ்வளவு பணம் வாங்கியுள்ளனர்? என்று கேட்டுள்ளார். உடனே சீனா அதிபர், நான் மாமல்லபுரம் வரும்போது, அந்த லிஸ்ட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீனா அதிபரிடம் இந்தியப் பிரதமர் மோடி, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு சீனாவிடம் பணம் வாங்கியவர்களின் லிஸ்டை, பிரிண்ட் அவுட்டாக அல்லது எக்ஸெல் சீட்டில் டைப் செய்து பென் டிரைவில் வாங்கிவிட்டால் இது குறித்து வர இருக்கும் பத்திரிகை செய்தி மூலம் தமிழகத்தின் உண்மை போராளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது ஐ.நா மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, கூடங்குளம் போராட்டத்துக்கு கொடுத்த அமெரிக்கப் பணம், கிறித்தவ பாதிரியார்களுக்கு வந்த பணம் உள்பட உள்துறை அமைச்சகம் அனுமதியோடு இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டு பணம் குறித்த விபரங்களை, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பென் டிரைவில் வாங்கி வந்துவிட்டார். இந்தியாவில் இருந்து கொண்டு, FCRA எனும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, வெளிநாட்டுப் பணத்தை கோடி கோடியாக வாங்கி, மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து போராடுபவர்கள் யார்? யார்? என்ற விபரம் அனைத்தும் பிரதமர் மோடியின் பென் டிரைவில் வந்துவிட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு பணம் கொடுத்த சீனா மட்டும்தான் பாக்கி. அதையும் சீனா அதிபர் மாமல்லபுரம் வரும்போது பென் டிரைவ், பிரிண்ட் அவுட் இரண்டையும் கொடுத்து விடுவார். பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை இன்னும் ஒரு வாரத்தில் இருக்கும். அதன்பிறகு தமிழ்நாட்டில் குடிதண்ணிக்குக் கூட போராட்டம் நடக்குமா என்று தெரியவில்லை.

சீனா அதிபர் பேச்சுவார்த்தையில், இந்திய - பூடான் எல்லையில் சீனாவால் போடப்பட்ட டோக்லாம் சாலை அகற்றப்படலாம். அருணாச்சல் பிரதேச மாநிலத்தையும், காஷ்மீரின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து வைத்துள்ள சீனாவிடம் இருந்து, இந்திய தாய்நாட்டின் நிலங்கள் மீட்கப்படலாம். இந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவு பகுதியில் இலங்கை - சீன ராணுவத்தளம் அமைத்துள்ளது. அது அகற்றப்பட்டு கச்சத்தீவு மீட்கப்படலாம். எது நடந்தாலும் தீபாவளி கொண்டாட தயாராக இருங்கள்’’ என அந்த வாட்ஸ் அப் தகவல் முடிகிறது