ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பாலுவை பஞ்சராக்கிய துரைமுருகன்: சீனியர் பூனைக்கு மணி கட்டுவது யார்?
ஸ்டாலின், கனிமொழி முன்னிலையில் அத்தனை தலைமை கழக நிர்வாகிகள் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் டி.ஆர்.பாலு மீது துரைமுருகன் பாய்ந்து திட்டிய விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தி.மு.க.வின் தலைவர் கலைஞர் வெகுவாக நினைவாற்றல் இழந்து, செயல்பட முடியாமல் இருக்கிறார். பேராசிரியர் அன்பழகனோ நடக்கமுடியாமல் இருக்கிறார். செயல்தலைவராக ஸ்டாலின் ஆட்சி புரியும் நிலையில் அவருக்கு உதவியாக சினியாரிட்டி பகட்டோடு வலம் வருபவர் துரைமுருகன். பிடிக்குதோ பிடிக்கலையோ அவரது வயதுக்கும், அனுபவத்துக்கும், கட்சி பதவிக்கும் மரியாதை கொடுத்து அவரிடம் அடங்கிச் செல்கின்றனர் மற்ற முக்கிய நிர்வாகிகள்.
இந்நிலையில் இன்று டி.ஆர்.பாலுவிடம் துரைமுருகன் நடந்து கொண்ட விதம் தி.மு.க. சீனியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதாவது டெல்லியிலிருந்து திரும்பிய ராசா மற்றும் கனிமொழியை ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்தினார். அப்போது
ஸ்டாலினின் வலது புறம் ராசாவை அடுத்து நின்ற டி.ஆர்.பாலு ஸ்டாலினின் இடது புறம் நின்ற கனிமொழிக்கு இங்கிருந்தபடியே சால்வை அணிவிக்க முயல, அதற்கு துரைமுருகன் கடுப்பாகி திட்ட, பிறகு பாலு அந்த சால்வையை கனியின் இடது தோளில் பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டார்.
இந்த செயலுக்கு எல்லோர் முன்னிலையிலும் டி.ஆர்.பாலுவிடம் கடுமையாக நடந்து கொண்டுவிட்டார் துரைமுருகன். அப்போதைக்கு பாலுவால் எதுவும் பேசமுடியவில்லை. பிற்பாடு பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரிடம் ‘என்ன நினைச்சுட்டு இப்படி பிஹேவ் பண்றார். நானும் மத்தியமைச்சரா இருந்தவன், நாடாளுமன்றத்தில் நம்ம கட்சியின் முகமாகவேஇருந்தவன். என்கிட்ட இப்படியா நடந்துக்கிறது?’ என்று கொதித்தாராம்.
ஆனால் அதே துரைமுருகன் சால்வை அணிவிக்கிறேன் பேர்வழி என்று கனிமொழியை கடுப்பேற்றியது தனி கதை.
ஏற்கனவே துரைமுருகனின் ஓவர் உரிமையாட்டங்கள் மீது ஸ்டாலினே கடுப்பில்தான் இருக்கிறாராம். மோடி கோபாலபுரம் வந்து சென்றபின் தன் வீட்டு வாசலில் உள்ள தொண்டர்களை பார்க்க சக்கர நாற்காலியில் வந்து கையசைத்தார் கருணாநிதி. அன்று ஓவர் உரிமையில் அந்த நாற்காலியின் அருகிலேயே நின்று தொண்டர்களுக்கு கருணாநிதி தெரியாத வண்ணமாக துரை முருகன் நடந்து கொண்டாராம். தொண்டர்கள் சிலர் துரைமுருகனின் பெயரை உச்சரித்து கடுமையாய் கத்த, ஸ்டாலின் அதை புரிந்து கொண்டு அவரை நகர சொல்லியிருக்கிறார். ஆனாலும் துரைமுருகன் அமைதியாவதில்லையாம்.
ஹும்! துரை பூனைக்கு யார் மணி கட்டுவது?