ஆர்.கே.நகரின் ரியல் ஹீரோ வெற்றிவேல்: தினகரனே புகழ காரணம் என்ன?...
எப்போதும் தீபத்தில் எரியும் நெருப்பு பிரகாசமாய் தெரியும்! ஆனால் அது எரிவதற்கு காரணமான திரி வெளியில் தெரிவதில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் இமாலய வெற்றி பெற்றது பெரிதாய் பேசப்படுகிறது. இந்த வெற்றிக்கான அடிப்படையே வெற்றிவேல்தான் என்கிறார்கள்.
பெங்களூரு புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் இருவரும் தங்கள் நாவன்மையை காட்டி பிரச்சாரம் செய்து தினகரனை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆனால் வெற்றிவேலோ மூளையை பயன்படுத்தி சில அதிரடிகளை நிகழ்த்தி, அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்துகிறார் என்கிறார்கள்.
வாக்குபதிவுக்கு முந்தைய நாள் ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோவை வெளியிட்டார் வெற்றி. இதன் மூலம் ‘போயஸிலேயே ஜெ., இறந்துவிட்டார்! அப்பல்லோவுக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டவர் மீளவேயில்லை!’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை உடைத்தெறிந்து மக்களுக்கு சசி அணி மீது அபிமானத்தை உருவாக்கினார்.
இது மட்டுமல்ல ஆர்.கே.நகர் தொகுதி முழுக்க வெற்றி வேல் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயரும் தினகரனுக்கான வாக்கு வங்கியாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.
2015ல் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வெற்றி. ஜெ., ஜெயித்த பின் அந்த தொகுதிக்கான பொறுப்பு வெற்றிவேலிடம் தரப்பட்டது. அந்த வகையில் தினம்தோறும் சுமார் 10 குடும்பங்களையாவது நேரில் சந்தித்து பேசுவாராம் வெற்றி. அந்த வகையில் தொகுதி முழுக்கவே நேரடியாக நெருக்கமாக ஐக்கியமானார்.
ஸ்கூல், காலேஜூக்கு ஃபீஸ் கட்ட முடியாத பிள்ளைகளின் பிரச்னைகளை ஜெ., கவனத்துக்கு கொண்டு சென்று சுமார் 60 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றுத் தந்தது வெற்றியின் பெரிய சக்ஸஸ்.
2015 வெள்ளத்தின் போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் பதினாறு நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளை ஜெயலலிதா, வெற்றிவேல் மூலம் வழங்கினார். கியூவில் நிற்க வைத்தால் சிக்கலாகலாம் என்றெண்ணி, வெற்றியே நேரடியாக சென்று தந்திருக்கிறார். இது அவரது மதிப்பை மேலும் உயர்த்தியது. இந்த நிவாரணப் பொருட்களின் மதிப்பு சுமார் 34 கோடி ரூபாய் என்பதை கவனிக்க.
ஆர்.கே.நகர் தொகுதியிலிருக்கும் அ.தி.மு.க.வின் ஒன்றிய, கிளை நிர்வாகிகளெல்லாம் வெற்றியின் வெகு தீவிர ஆதரவாளர்கள். அவர்களை நல்லபடியாக அவர் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் அன்பை பெற்று வைத்துள்ளார். வெற்றிவேலுக்காக எதையும் செய்யும் கூட்டம் அது.
ஆக வெற்றிவேலின் இந்த சாதுர்யங்களும், தொகுதியில் அவர் பெற்று வைத்திருக்கும் அன்பும், நம்பிக்கையும்தான் தினாவின் வெற்றியை அமோகமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ‘ரியல் ஹீரோ நீங்கதான் வெற்றி’ என்றாராம் தினகரன், இடைத்தேர்தல் முடிவு வெளியான நொடியில்.
- விஷ்ணு பிரியா