செந்தில்பாலாஜி கட்சி தாவியதே தினகரனின் திட்டம் தானா? திமுகவை திக்குமுக்காட விடும் ஷார்ப் பிளான்...
சசிகலாவின் விசுவாசிகள்தான், அவரைக் கண்டு நடுங்கி அவருக்கான ஆவன எல்லாம் செய்து கொடுத்தவர்கள்தான் இன்று அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வில் இருக்கும் அத்தனை பேரும். அதிலும் செந்தில் பாலாஜி ஸ்பெஷல். காரணம், அவருக்கு சசிகலாவின் உறவினர்கள் தரப்பில் கூட நல்ல பிணைப்பு இருந்தது.
‘எங்க குடும்பத்து பையன்’ என்று சசி குடும்ப சீனியர் நபர்கள் சிலர் கமெண்ட் அடிக்குமளவுக்கு மன்னார்குடி வகையறாவினுள் வளைய வந்தவர் செந்தில் பாலாஜி.
இப்படிப்பட்டவர் திடீரென தி.மு.க.வுக்கு தாவியபோது ‘சந்தர்ப்பவாதி, பச்சோந்தி, நம்பிக்கை துரோகி! நன்றி கெட்டவர்!’ என்று பொதுவான விமர்சனம் எழுந்தது. ஆனால் தி.மு.க.விலுள்ள சீனியர்கள் சிலர் ‘எங்களுக்கென்னமோ அவரு தினகரனோட உளவாளியாக இங்கே வர்றாரோன்னு டவுட்டா இருக்குது. ரொம்பவே கவனமா இருங்க தளபதி.’ என்று எச்சரித்தனர். ஸ்டாலினும் இதை கவனமாக கவனித்தார்.
இந்நிலையில், தி.மு.க.வின் அந்த சீனியர்கள் டவுட் செய்தது போலவே இப்போது சில சீன்கள் ஆரம்பாகியுள்ளன. அதாவது இது நாள் வரையில் தினகரன் ஸ்டாலினை திட்டியதில்லை, ஸ்டாலினும் தினகரனை பெரிதாய் லட்சியம் செய்ததில்லை. சொல்லப்போனால் தி.மு.க. பிரமுகர்களிடம் அனுசரணையாகதான் நடந்து கொண்டார் தினா. ஆனால் அப்பேர்ப்பட்டவர் இப்போது சில நாட்களாக தி.மு.க.வை திட்ட துவங்கியுள்ளார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு தாவிய பிறகுதான் தி.மு.க.வை நோக்கி தினகரனின் போக்கில் மாற்றமும், அதற்கு தி.மு.க.வின் ரியாக்ஷனும் அதிரிபுதிரியாகியுள்ளன.
‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததே பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்காகத்தான். ஒற்றுமையாக இருந்த காங் கூட்டணியில் இதோ ஸ்டாலின் மூலமாக இப்போது குழப்பங்கள், கலகங்கள் பிறந்துவிட்டதா இல்லையா! ஆக ஸ்டாலின் பேசியது பி.ஜே.பி.க்காகவே.’ என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
இதற்கு ரியாக்ட் செய்திருக்கும் தி.மு.க.வின் பரந்தாமன் “பி.ஜே.பி.யோடு நாங்கள் தொடர்பில் இருப்பதாய் சொல்லும் தினகரன், அதை நிரூபிக்க ஒரு ஆதாரம் காட்டட்டும் பார்க்கலாம். ஆனால் அவர்தான் பின்பக்கமாய் அந்த கட்சியுடன் தொடர்பில் இருக்கிறார்.
காபிபோசா சட்டத்தில் முப்பது கோடி ரூபாய் அபராத தொகையை இன்னமும் அமலாக்கத்துறை வசூலிக்கவில்லை இவரிடம். ஃபெரா வழக்கிலும் தீர்ப்பு இழுத்தடிக்கப்படுகிறது. ஆக இதெல்லாம் பி.ஜே.பி.யின் கரிசனத்தாலேயே நடக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.” என்று வெளுத்திருக்கிறார்.
ஆக செந்தில் பாலாஜி கை மாறிய பிறகுதான் ஸ்டாலினும், தினகரனும் மாறி மாறித் தாக்கிக் கொள்கிறார்கள். ஆக செந்தில்பாலாஜி கட்சி தாவியதே தினகரனின் திட்டம் தானா? தி.மு.க.வினுள் உள்ள அரசியல் மூவ்களை உள்ளே இருந்தே அறிந்து தினகரன் மற்றும் சசிகலாவுக்கு பாஸ் பண்ணவும், தி.மு.க.வின் வலுவான கூட்டணிக்குள் குழப்பம் விளைவுக்கவும்தான் செந்தில் பாலாஜி இங்கே வந்திருக்கிறாரா? அவர் தினகரனின் ஸ்லிப்பர் செல்லேதானா! என்று புலம்பிக் கொட்டுகின்றனர் சீனியர்கள்.
இதெப்டியிருக்குது.