தினகரன்யே பகைத்துக் கொள்ளும் தர்மபுரி எம்பி செந்தில்...! தலைக்கு தில்லு தான்.
சன் குழுமத்தைச் சேர்ந்த தினகரன் நாளேட்டை விமர்சித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மீண்டும் ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் எதிர்க்கட்சி பெயர் செய்தியில் போடுவோம்.. ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் போட மாட்டோம்... வாழ்க தினகரன் செய்தி தர்மம் என குறிப்பிட்டுள்ள அவர், தயவு செய்து எனது புகைப்படத்தை தவிர்த்தால் மிக்க மகிழ்ச்சி என கருத்து பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி பெயரை செய்தியில் போடுவோம் ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெயரில் போட மாட்டோம் என செயல்பட்டுவரும் தினகரன் பத்திரிகையின் செய்தி தர்மம் வாழ்க என தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் விமர்சித்துள்ளார். தினகரன் நாளிதழில் வெளியான ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதிரடிகளுக்குப் பெயர் பெற்றவர் ஆவார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் ஆவார். தனது செயல்களாலும் பேச்சு திறமையாலும் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் ஆவார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதே அடிக்கடி தனது தொகுதிகளில் ஆய்வுகளை நடத்தி அதிகாரிகளை கதிகலங்க வைத்தவர் எம்.பி செந்தில்குமார். அரசு கட்டிடங்கள், சாலைகள், அதற்கான கட்டுமானங்கள் தரம்வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காக அவரே நேரடியாக ஆய்வு செய்து எவ்வளவு பெரிய ஒப்பந்ததாரராக இருந்தாலும் துணிச்சலாக குறைகளைச் சுட்டிக்காட்டி தீர்வு காண்பதில் சிறப்பாக செயல்படுபவர் என தொகுதி மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர் செந்தில்குமார்.
எதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி எதிர் தரப்பினரை வாயடைக்க வைப்பதில் வல்லவர். பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் நமக்கேன் வம்பு என பதவி காலம் முடியும் வரை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போகும் நிலையில், பிரச்சினைகளை தேடிச்சென்று அதற்கு தீர்வு தருபவர் செந்தில்குமார் என்ற பெயர் அவருக்கு தொகுதியில் உண்டு. இப்படிப்பட்ட அவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முன்வைத்த ஒரு விமர்சனம் சன் தொலைக்காட்சிக்கும் அவருக்குமான தீரா பகையாக மாறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அது நீடிக்கிறது. அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிய போது, பிரச்சார வடிவமாக தமிழக அரசின் சார்பில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் விளம்பரம் ஒன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
இந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிமுக தேர்தல் பரப்புரை விளம்பரமான அதை சன் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது, அப்போது அதை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார் செந்தில்குமார். எடப்பாடி பழனிச்சாமியின் விளம்பரம் அடிக்கடி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒருகால்.. சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம், ஆனால் கலைஞரின் உடன் பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டர்கள் இதை இலேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுக விளம்பரங்களை சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என்று அன்று அறிவுரை வழங்கினார். மேலும், தொழில் தான் முக்கியம், திமுகவுக்கும் எங்களுக்கும் இனி தொடர்பு இருக்காது திமுகவிடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டு இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யலாம் என கூறியிருந்தார்.
இந்த பதிவு சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சன் குழுமத்தில் உள்ள சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழ் போன்ற எதிலும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடர்பான செய்திகள் வெளியிடக்கூடாது என மாறன் சகோதரர்கள் கட்டளை பிறப்பித்ததாக தகவல் வெளியானது. அது முதல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் செய்திகள் தினகரன் மற்றும் சன் தொலைக்காட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதை குத்திக் காட்டும் வகையில் செந்தில் குமார் மேலும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், தினகரன், தமிழ் முரசு, மாலை முரசு, சன் செய்திகளில் இனி என்னை சார்ந்த செய்திகள் வெளியிட வேண்டாம் என நிருபர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதள முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலத்தில் சீப்பை மறைத்து வைப்பது சாத்தியமில்லாத ஒன்று என விமர்சித்து இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றும் ஏற்பட்டு திமுக பல அதிரடியாக திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது.
இந்நிலையில் சன் குழுமத்தைச் சேர்ந்த தினகரன் நாளேட்டை விமர்சித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மீண்டும் ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சி பெயர் செய்தியில் போடுவோம்.. ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் போட மாட்டோம்... வாழ்க தினகரன் செய்தி தர்மம் என குறிப்பிட்டுள்ள அவர், தயவு செய்து எனது புகைப்படத்தை தவிர்த்தால் மிக்க மகிழ்ச்சி என கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் இதை குறிப்பிட்டுள்ள அவரின் ஆதரவாளர் ஒருவர், தினகரன் நாளிதழ் சேலம் பதிப்பு, திரும்பத் திரும்ப அண்ணன் டாக்டர் செந்தில்குமார் அவர்களின் பெயரை நாளிதழில் இருட்டடிப்பு செய்வதற்கான காரணம் என்னவென்று தெரியும், அவரின் பெயரை தான் உங்களால் மறைக்க முடியுமே தவிர, அவரின் மக்கள் பணிகளை உங்களால் மறைக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் கோஸ்டி மோதல்கள் உள்ளது என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், செய்தி புறக்கணிப்பு விமர்சனம் தற்போது திமுகவில் இரண்டு முக்கிய எம்பிக்கள் இடையே மோதலாக மாறியுள்ளது. இது திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.