சசிகலாவுக்கு சிறப்பு சலுகை சிக்கலில் சிக்கிய சத்ய நாராயணாவுக்கு புதிய பொறுப்பு…..காலை பதவி ஏற்று மாலையில் ஓய்வு பெறுகிறார்…
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிக்கிய டிஜிபி சத்யநாராயணாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை பொறுப்பேற்றுக் கொள்ளும் அவர் மாலையில் ஓய்வு பெறுகிறார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படடதாக, டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணா மீது பகிரங்கமாக ரூபா குற்றம்சாட்டினார்.
இந்த பிரச்சனை நாடு முழுவதும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சத்யநாராயணா, ரூபா ஆகியோரை கர்நாடக அரசு சிறைத்துறையில் இருந்தது மாற்றம் செய்தது.
ரூபா பெங்களூரு போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சத்ய நாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சத்ய நாராயணா இன்று ஓய்வு பெறுவதால் அவரை காத்திருப்போர் பட்டியலில்வைக்க முடியாது என்பதால் அவருக்கு புதிய பதவி வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த சத்ய நாராயணா டிஜிபி அந்தஸ்தில் தீயணைப்புத்துறை மற்றும் ஊர் காவல் படை பொது கமாண்டோவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை சத்ய நாராயணா பதவி ஏற்றுக் கொள்கிறார். அதே நேரத்தில் இன்று மாலை அவர் ஓய்வு பெறுகிறார்.