'தொண்டர்கள் இயக்கமாகவே அதிமுக இயங்கும்' - துணை முதல்வர் உறுதி...!
தற்போதைய ஆட்சி மக்களாட்சியாகவே செயல்படும் எனவும் இயக்கத்தையும் ஆட்சியையும் வெற்றிப்பாதையில் கொண்டு செல்வோம் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு ஒதுக்கப்பட்டதைதொடர்ந்து எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திற்கு வந்துள்ளனர். அங்கு நிர்வாகிகள் மத்தியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. காரணம் அதிமுக இரு அணியாக பிரிந்தது. 12 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பன்னீர் அணி நாங்களே உண்மையான அதிமுக என்ற குரலோசையை எழுப்பியது.
இதனால் குழம்பிய எலெக்ஷன் கமிஷன் யாருக்கும் இலை இல்லை என முடிவெடுத்தது. இதையடுத்து தன்னோடு ஒத்துழைக்காத டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை சமாதானத்திற்கு அழைத்தார். அதன்படி தற்போது, இரட்டை இலை சின்னம் மீண்டும் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு கிடைத்துள்ளது.
இதைதொடர்ந்து எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திற்கு வந்துள்ளனர். அங்கு நிர்வாகிகள் மத்தியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தற்போதைய ஆட்சி மக்களாட்சியாகவே செயல்படும் எனவும் இயக்கத்தையும் ஆட்சியையும் வெற்றிப்பாதையில் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தார்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப இயக்கம் உள்ளது எனவும் முழு வெற்றியையும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கு அற்பணிக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையம் மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கியுள்ளது எனவும் ஜெ.நியமித்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து இயக்கத்தை வழிநடத்தி செல்வோம் எனவும் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தில் தீர்ப்பு வழங்க வேண்டியது டிடிவி இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தான் தீர்ப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தினார் எனவும் அதிமுக பொதுக்குழு நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஆதரவுடன் கட்சியையும் சின்னத்தையும் மீட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.