டிமானிடைசேசன் இந்தியாவின் மிகப் பெரிய தவறு !! 2000 ரூபாய் நோட்டு ஊழலுக்கு ஊற்றுக்கண்… போட்டுத் தாக்கும் அமெரிக்க வல்லுநர்!!!
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும், அதற்கு மாற்றாக 2000 ரூபாய் நோட்டு வெளியிட்டது ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்துவிட்டது என்றும் அமெரிக்க பொருளாதார வல்லுனரும் நோபல் பரிசு பெற்றவருமான ரிச்சர்ட் தாலர் தெரிவித்துள்ளார்..
அமெரிக்காவில் சிக்காக்கோ பல்கலைக்கழக மாணவரான ஸ்வராஜ் குமார், பொருளாதாரவியல் நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான ரிச்சர்ட் தாலரிடம், இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மின்னஞ்சல் மூலம் கருத்து கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள ரிச்சர்ட் தாலர் , ரொக்கமற்ற பணப்பரிமாற்றம், கறுப்புப் பண ஒழிப்புக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது சிறந்த திட்டம். ஆனால், அதை அமல்படுத்திய விதத்தில் ஆழமான குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவை குறைந்த ரொக்க பணபரிவர்த்தனை உடைய சமுதாயமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாவும் இருக்கலாம் என அவர் கருத்து கூறியுள்ளார்.
மேலும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துவிட்டு, அதற்கு மாறாக அதைவிட உயர்ந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது குழப்பமான நடவடிக்கை எனவும் அது ஊழலுக்கான ஊற்றுக் கண்ணை திறந்துவிட்டுள்ளது என்றும் ரிச்சர்ட் தாலர் விமர்சனம் செய்துள்ளார்.