அலட்சியமாக இருந்தால் டெல்டா பிளஸ் கோரத்தாண்டவம் ஆடிவிடும்.. மீண்டும் ஊரடங்கு தான்.. விஜயகாந்த் எச்சரிக்கை.!
போதிய தடுப்பூசியின்றி மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பற்றாக்குறை போக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
போதிய தடுப்பூசியின்றி மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பற்றாக்குறை போக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா வகை வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2வது அலைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உருமாறிய வைரஸை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போது செயல்பாட்டிலிருக்கும் கோவிட் தடுப்பூசிகள் இந்த உருமாறிய வைரஸுக்கு எதிராக திறம்படச் செயல்படாது என்றும் இருப்பினும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரசில் பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள முக கவசம் அணியவேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, டெல்டா வைரஸ் தொற்றுகள் பரவாமல் தவிர்க்க, ஒவ்வொருவரும் வெளியே செல்லும்போது, முக கவசம் அணியவேண்டும்.
போதிய தடுப்பூசியின்றி மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பற்றாக்குறை போக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டி விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.