சென்னை,கொச்சி,பெங்களுரு - 3 நகரங்களில் 3 நாட்களில் தினகரனை விசாரிக்க திட்டம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றம், டிடிவி.தினகரனை 5 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.
இதைதொடர்ந்து டெல்லி உதவி கமிஷனர் சஞ்சய் சராவத் மற்றும் போலீசார், அவரை விமானம் மூலம் சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னையில் ஹவாலா பணம் பறிமாற்றம் குறித்து தீவிரமாக விசாரிக்க உள்ளனர். மேலும், பணம் பறிமாற்றம் தொடர்பாக கொச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் அவரை அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
டிடிவி.தினகரனிடம் 5 நாட்கள் மட்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், இந்த வழக்கை விரைந்து முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக 3 நாட்களில் வெளியூர்களுக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா 8 நாள் காவலில், எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குக்கு தேவைப்பட்டால், சுகேஷ் சந்திராவையும் சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் தீவிரமாக விசாரித்து, அதன் மூலம் கிடைக்கும் தகவல்கள், ஆதாரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இதனால், டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஹவாலா பணம் பரிவர்த்தனையில் டிடிவி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரா ஆகியோரின் நண்பர்களிடமும் விசாரிக்க உள்ளனர். இதில், பல தகவல்கள் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
டெல்லி போலீசார், டிடிவி.தினகரனை கைது செய்வதற்கு முன் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஒரே வார்த்தையில் அவர் “ஆம், இல்லை” என்றே கூறி வந்துள்ளார். இதனால், அவரை கைது செய்யும் நிலை ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க இருந்த சம்பவத்தில், அந்த துறையின் மூத்த அதிகாரி யார் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் தனிப்படை விசாரித்து வருகின்றனர். இதில், அரசியல் தலைவர்களின் தலையீடு உள்ளதா எனவும் விசாரிக்கப்படுகிறது.