delhi police planning to get dinakaran to delhi

இரட்டை இலை லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று இரவு டெல்லி அழைத்துச் செல்லப்படுகிறார். 

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் அளிக்க முயன்ற வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை 5 நாள் காவலில் எடுத்த போலீசார் வழக்கு விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். 

பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து அவரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி கேளப்பாக்கம், திருவெற்றியூர் உள்ளிட்ட 5 இடங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்ற டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். 



அப்போது லஞ்சம் அளிக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு பின்னணியில் 5 பேர் இருப்பதை கண்டறிந்த போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவை இன்றிரவு 7.30 மணிக்கு டெல்லி அழைத்துச் செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள ஹவாலா ஏஜெண்ட்களுடன் வைத்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.