நாடாளுமன்ற போலி அடையாள அட்டை விவகாரம் - சுகேஷ் சந்திரசேகருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் முதலில் கைது செய்யப்பட்டவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்
இவரைத் தொடர்ந்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவலா ஏஜெண்டுகள் லலித்குமார், நரேஷ் ஆகியோர் ஓன்றன் பின் ஒன்றாக கைதாகினர்.
இரட்டை இலை லஞ்ச வழக்கில் சுகேஷைத் தவிர்த்து கைதான அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சுகேஷ் தாக்கல் செய்ய ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சுகேஷ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.முரளிதர் முன்பு நேற்று நடைபெற்றது.
அப்போது, நீதிபதி தெரிவிக்கையில், “மனுதாரர் சுகேஷிடம் இருந்து நாடாளுமன்ற போலி அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.போலி அடையாள அட்டையை வைத்து நாடாளுமன்றத்திற்குள் எளிதாக பிரவேசித்து விட முடியும்.
எனவே சுகேஷூக்கு பிணை வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.இதனால் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.” இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.