அமித்ஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்..!! 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கோவிட் மையம் தயார்..!!
மேலும் கோவிட் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கவும், அதற்கு ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை வழங்கி உதவ வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அதில் கோரியுள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்துவரும் நிலையில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் கொரோனா தொற்று தொடர்பாக கெஜ்ரிவாலும் அமித்ஷாவுக்கும் இடையே மூன்று முறை சந்திப்பு நிகழ்ந்துள்ள நிலையில். அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா நோயால் 4 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றுநோயின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை பன்மடங்கு கூடிக்கொண்டே செல்கிறது, இதுவரை டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ராதா சுவாமி சத்சங் மைதானத்தில் பத்தாயிரம் படுக்கைகள் வசதிகளுடன் அமைக்கப்பட்டுவரும் கோவிட் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்யுமாறு அமித்ஷாவுக்கு அவர் அழைப்பு விடுத்து அந்த கடிதம் எழுதியுள்ளார். மேலும் கோவிட் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கவும், அதற்கு ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை வழங்கி உதவ வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அதில் கோரியுள்ளார்.
மேலும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வைரஸ் தொற்று உள்ளவர்களை வீட்டு தனிமையில் வைப்பதன் மூலம் பிரச்சனை அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளார். எனவே, புதிய திட்டத்தின்படி கொரோனா நோயாளியை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைப்பது இப்போது அவசியமாகிறது. கொரோனா தொற்று பாசிட்டிவ் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு செல்ல வேண்டுமா கூடாதா என குழப்பத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். என அதில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி அரசு திங்கட்கிழமை இரவு வெளியிட்ட தரவுகளின்படி தலைநகரில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 62,655 ஆக உயர்ந்துள்ளது இதுவரை மொத்தம் 2,233 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனா தொற்றில் டெல்லி இரண்டாவது இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.