"போயஸ் கார்டனை ஜெ. நினைவு இல்லமாக மாற்ற முழு ஆதரவு தருகிறேன்" - தீபக் அதிரடி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
போயஸ் கார்டன் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என தீபா குற்றஞ்சாட்டினார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது. அப்போது செய்தியாளர்களிடம் கூறிய தீபா, தனது சகோதரன் தீபக், போன் செய்து போயஸ் கார்டன் வரவழைத்ததாகவும், அங்கு வந்த போது சிலர் தன்னையும், பாதுகாவலரையும் தாக்கியதாக கூறினார்.
இதுகுறித்து தீபாவின் சகோதரர் தீபக் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எங்களது அத்தை ஜெயலலதாவுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதற்காக தீபாவை நான் அழைத்தேன். ஆனால், அங்கு மாதவன் எதற்கு வந்தார்.
மாதவன் எதற்காக எம்ஜிஆர் பெயரில் கட்சியை தொடங்கினார். அவருக்கும், எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
தமிழக அரசு, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றினால், அதற்கு நான் ஆதரவு தருவேன். இதில் எந்த மாற்றம் இருக்காது.
1991ம் ஆண்டுக்கு முன் ஜெயலலிதா வாங்கிய அனைத்து சொத்துக்களுக்கும் நானும், தீபாவும் மட்டுமே வாரிசு. இன்று நடந்த சம்பவத்தில் செய்தியாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.