"தீபா முதல்வராக வேண்டும்" - ஈ.வி.கே.எஸ். போட்ட புது குண்டு!!
பாஜகவில் இருந்து வந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு தரக்கூடாது என்றும், தீபா தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். கூறியுள்ளார்.
சென்னை, திருவொற்றியூரில் தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை இன்று திறக்கப்பட்டது. இந்த சிலையை, தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபா தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்று கூறினார். தீபா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சாயலில் உள்ளதால் மக்கள் அவரை ஏற்பார்கள் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது அதிமுக என்ற கட்சி டி.டி.வி. தினகரனின் சட்டைப்பையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு தரக்கூடாது என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.