“சுயலாபத்திற்காக பேசுகிறார் தீபக்…” - தீபா பகீர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடுகின்றனர். முன்னதாக அவரது அண்ணன் மகள் தீபா, இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக கூறினார். இதைதொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தீபக், போயஸ் கார்டன் வீட்டில் தனக்கும், தீபாவுக்கும் உரிமை உள்ளது என கூறினார். இது அவராகவே பேசவில்லை. சுய லாப நோக்கோடு பேசியுள்ளார்.
இத்தனை நாள் மவுனமாக இருந்த தீபக், இப்போது திடீரென செய்தியாளர்களை சந்தித்து பேசுவது, சிலரது கபட நாடகம் என்பதே என் கருத்து.
தினகரன் தலைமை வேண்டாம் என்று கூறும் தீபக், சசிகலா தலைமையில் அதிமுக செயல்படலாம் என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அதிமுகவை வழிநடத்த சசிகலா குடும்பத்தினர் யாருக்கும் தகுதி இல்லை. மக்கள் இந்த தீயசக்திகளை விரட்ட வேண்டும்” என அதிரடியாக கூறினார்.
அதேபோல், தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் செயல்படுகள் பற்றி கேட்டபோது, “அவருக்கும் அந்த தகுதி கிடையாது. இந்த ஆட்சி நீடிக்குமா என்பதும், அவரது செயல்பாடுகள் பற்றியும் கருத்து கூறவில்லை.” என்றார்.
அதிமுகவில் இருந்து விலகிய பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானதே தவிர, என்னுடைய அரசியல் பயணத்தை அவருடன் தொடருவேன் என்பது தவறான கருத்து.
எனது அரசியல் பயணம் விரைவில் தொடங்குவேன். எனது பணி, எனது திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். செயல்படுத்துவேன். அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
என்னை நம்பி அதிமுக தொண்டர்கள் வந்தார்கள். வருகிறார்கள். என்னை நம்பி வந்தவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
எனக்கு மிரட்டலோ, அச்சுறுத்தலோ எது வந்தாலும் தயங்க மாட்டேன். பயப்பட மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் சுயநலம் இல்லாமல் பணியாற்றுவேன். யாருக்க்காவும் பயந்து அரசியலை விட்டு விலக மாட்டேன்.
போயஸ் தோட்டம் வீடு நினைவிடமாக மாற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள். விரைவில் அதை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.