"அத்தையின் சொத்து எனக்கு வேண்டாம்... அவரது அரசியல் வாரிசு எனும் அங்கீகாரம் போதும்" - தீபா உருக்கம்
ஜெயலலிதாவின் சொத்து எனக்கு தேவையில்லை. அவருடைய அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் பெறவே நான் விரும்புகிறேன் என தீபா, செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தீபா அளித்த பேட்டி வருமாறு:-
போயஸ் கார்டன் எனக்கும், தீபக்குக்கும் மட்டும் சொந்தம். இதற்கான அனைத்து ஆதராமும் என்னிடம் இருக்கிறது. இந்த சொத்து எனது பாட்டி வாங்கியது. இதற்கு ஆவணம் தேவைப்படாது. இதுதொடர்பான உயில் உள்ளது.
என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான சதி நடக்கிறது. இதன் பின்னணியில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தான் உள்ளனர். இவர்கள் கூடவே தான் எப்போதும் தீபக் சுற்றினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது பற்றி ஏதாவது வகையிலும் தீபக் கூறவில்லை. செய்தியாளர்களிடம் இதுவரை எந்த ஆதாரமும் தரவில்லை. சசிகலா குடும்பத்துடன் அவர் ஒட்டி உறவாடி வருவதால், இத்தனை ஆண்டுகளாக தீபக்கிடம் இருந்து நான் விலகி இருக்கிறேன்.
பாட்டி வாங்கிய சொத்துக்கான உயில் என்னிடம் இருக்கிறது. போயஸ் கார்டன் எங்களிடம் தான் உள்ளது. ஜெயலலிதா சொத்துக்கு உரிமை கொண்டாடுவது என் நோக்கம் அல்ல. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் பெறவே நான் விரும்புகிறேன்.
அவரது அனைத்து வகையான ஆளுமைகளையும் தவறான பாதைக்கு சென்று விடாமல் மீட்பதே என் லட்சியம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே பலமுறைகேடுகள் நடந்தது. ஜெயலலிதாவின் கையெழுத்தை இவர்களாகவே போட்டுக் கொண்டதற்கும் ஆதாரம் இருக்கிறது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வமே தன்னிடம் இந்த ஆதாரங்கள் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். நிறைய பேரிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஜெயலலிதாவை தீபக் கொன்று விட்டார் என்பதை உரிய ஆதாரங்களுடன் அதனை நான் நிரூபிக்கிறேன் என்றார்.