ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது ஆதரவாளர்களின் துணையோடு நாளை புதிய கட்சி தொடங்க உள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான தொண்டர்கள், தினமும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று நேரில் சந்திக்கின்றனர்.

அப்போது, விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன், அதுவரை பொறுத்திருங்கள் என தொண்டர்கள் மத்தியில் தீபா பேசி வருகிறார். தினமும் தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடம் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வாங்குமாறு, அவரது உதவியாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.

உங்களுக்காக பணி ஆற்ற காத்திருக்கிறேன்’என்றார். இதனால் புதிய கட்சி தொடங்குவது குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை தீபா வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கிய தலைவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் தீபாவுக்கு ஆதரவு கேட்டு ஜெ தீபா அம்மா மாநில இளைஞர் பேரவையினர் நேற்று நடிகர் ஆனந்த்ராஜை சந்தித்தனர்.


ஆனந்த்ராஜ் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகினார். தற்போது, தீபா ஆதரவாளர்கள் அவரை சந்தித்து பேசியிருப்பதால், அவர் விரைவில் மீண்டும் அரசியலுக்கு வந்து தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியனின் ஆதரவாளர்களும் தீபா அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று அம்பாசமுத்திரத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்ளுடன் பி.எச்.பாண்டியன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் நாளை அவர் சென்னை வந்து தீபாவுக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதேபோல் முன்னாள் திருச்சி எம்எல்ஏ சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் எம்எல்ஏக்களும் தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீபா அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொண்டர்களை சந்தித்த தீபா, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிற சேலையை அணிந்திருந்தார். மேலும் ஜெயலலிதாவை போல் தன்னை அலங்கரித்திருந்தார். இதை பார்த்த அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதாவை பார்ப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர்.