deepa peravai volunteer joined in ops team

கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அப்போது, அவரது அண்ணன் மகள் தீபா, மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஏராளமானோர் தினமும் சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு சென்றனர். ஆனால், காலம் கடத்தி வந்து, கடந்த பிப்ரவரி 24ம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கினார்.

குறிப்பாக ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத லட்சக்கணக்கான தொண்டர்கள் தீபாவுக்க ஆதரவு தெரிவித்தனர். மேலும், அவரது பெயரில் பேரவைகளை தொடங்கி, உறுப்பினர்களை சேர்த்து கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகள் உருவானது. இதனால், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு சசிகலா அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் இடம் பெயர்ந்தனர். இதில் தீபா ஆதரவாளர்களும் அடங்கும்.

இந்நிலையில், வடசென்னை மாவட்ட தீபா பேரவை பொறுப்பாளர் ஜி.பாலாஜி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் தன்னை இணைத்து கொண்டார்.

அப்போது, மாவட்ட மீனவரணி செயலாளர் ஏ.கணேசன், டைகர் டி.தயாநிதி, எஸ் எம் முருகன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலையில், ஜி.பாலாஜி இணைந்த சம்பவம் தீபா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு ஆர் கே நகர் தொகுதியில் தீபா, ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் செய்தியாளர்கள், போலீசார், பொதுமக்கள் என பல தரப்பினரிடம் தீபா பேரவை நிர்வாகிகள், தகராறு செய்தனர். குறிப்பாக வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து கூட்டம் நடத்தியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.