ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக வை கைப்பற்றுவதில் சசிகலா மற்றும் தீபாவிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாளை அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரு தரப்பு தொண்டர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் தீபாவுக்கு பெருமளவு ஆதரவு தெரிவித்து வருவது தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு வரும் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் மூலம் தெரியவருவதாக பரவலாக கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் திருச்சியில் தீபாவின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஐயும் துணைக்கு இழுத்து வைத்துள்ள பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ஜெயலலிதாவே இருவருக்கும் ஆதரவு கேட்பது போன்று எழுதப்பட்டுள்ளது. ’ உங்களால் அம்மா என்று அழைக்கப்படும் செல்வி ஜெயலலிதாவாகிய நான், நமது கழகத்திற்கு எனது ரத்தத்தின் ரத்தமாகிய ஜெ,தீபா…எனது உண்மை விசுவாசி கழகத்தின் காவலன் ஓபிஎஸ் அவர்களும் இணைந்து கழகத்தையும்,கட்சியையும் மேலும் வெற்றிப் பாதைக்கு வழி நடத்திச் செல்ல தொண்டர்களாகிய நீங்கள் அனைவரும் ஆதரவுடன் திரண்டு வாரீர்…

துரோகிகளுக்கு வழி விடாதீர்கள். பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் இந்த சபதத்தை ஏற்று என் கனவை நனவாக்குவீர்களா.. செய்வீர்களா..நீங்கள் செய்வீர்களா… என எழுதப்பட்டிருந்தது.

இதே போன்று தீபாவுக்கு ஆதரவாக மேலும்,மேலும் ஆதரவு போஸ்டர்கள் பெருகி வருவது சசிகலா ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.