போயஸ் கார்டன் வீட்டை தீபா பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துட்டு போயிடணும்... விடாமல் துரத்தும் அதிமுக நிர்வாகிகள்
தீபா தீபக்கிற்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்ன வென்றால், இது சாதாரண இல்லம் கிடையாது.
அதிமுகவினருக்கு எத்தனையோ வேலைகள் இருக்கு... அதைப்போய் பார்க்க வேண்டும். தயவு செய்து போயஸ்கார்டன் பக்கம் வந்துடாதீங்க என கூறியிருந்தார் தீபா. ஆனாலும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை தீபா அனுபவிப்பதை அதிமுகவினர் விரும்பவில்லை. கோர்ட் தீர்ப்பு வழங்கியும் வேதா இல்லத்தை விட்டுக்கொடுக்க மனமின்றித் தவிக்கிறார்கள் அதிமுகவினர்.
வேதா இல்ல சாவியை பெற்றுக் கொண்டு வீட்டை சுற்றிப்பார்த்து விட்டு ஜெயலலிதா நின்று கைவீசியதை போலவே தீபாவும் அதே இடத்தில் நின்று கையசைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ’’எனது வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.
இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும். அதிமுகவுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கு.. இது அறிவுரை இல்ல. பொதுக் கருத்து.
அம்மா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை; ஆனால், இப்போதைய அதிமுக தலைவர்கள் இந்த வீடு இல்லையென்றால் அரசியல் இல்லை என்பது போல செயல்பட்டு வருகின்றனர். என்னைப் பொருத்தவரை இது எப்போதுமே என் அத்தை வீடு; இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே முதல் பணி’’ எனவும் தெரிவித்தார் தீபா.
ஆனால் தீபா, தீபக் இருவரலாலும் வேதா இல்லத்தை பராமரிக்க முடியாது. அவர்கள் ஓரிரு ஆண்டுகளில் ஏதாவது ஒரு சேட்டிடம் விறுவிடுவார்கள். அம்மா வாழ்ந்த வேதா இல்லம் வீணாகிவிடும் என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான், செல்லூர் ராஜூ, “ஜெயலலிதா ரசித்து விரும்பி கட்டியது வேதா இல்லம். இன்றும் அவரது நினைவுகள் அங்குள்ளது. உலக தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என எத்தனையோ பேரைச் சந்தித்த இல்லம் அது. எனவே அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால், அந்த இல்லத்தைச் சுற்றிப் பார்க்க இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
தீபா தீபக்கிற்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்ன வென்றால், இது சாதாரண இல்லம் கிடையாது. உலக தலைவர்கள் எல்லாம் போற்றி பாராட்டக் கூடிய, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தவரான ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்ற தாங்களாகவே மனமுவந்து அரசிடம் கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு உரிய வேறு எந்த சொத்தாக இருந்தாலும், அதை அவர்கள் அனுபவிக்க எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இவ்விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யக் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் தீபா தீபக் தாங்களாகவே அந்த வீட்டைக் கொடுத்தால் வரலாற்றில் பேசப்படுவார்கள்” என்றார்.
அதே கருத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் இப்போது முன் வைத்துள்ளார். ‘’ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. தீபக், தீபா ஆகியோர் பெருந்தன்மையோடு நினைவு இல்லமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்த தீர்வு” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் மட்டுமல்ல. பொதுமக்களும் அதையே நினைக்கின்றனர்.