பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம் - டிடிவி தினகரன் கண்டனம்
முதல்வர் எடப்பாடி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏஎக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சசிகலா தினகரனை நீக்குவது குறித்து விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி தெரிவித்தார்.
இந்நிலையில், எடப்பாடிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனவும், செப்.12-ல் அதிமுக பொதுக்குழு கூடும் என்று எடப்பாடி அறிவித்திருப்பது சட்டவிரோதம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.