இனி மளிகை, காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டும்தான்... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கும் வகையில் புதிய கட்டுப்படுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடுமையாகப் பரவி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களின் தேவையின்றி சாலைகளில் திரிவது போன்ற அலட்சிய போக்குகள் தொடர்கின்றன. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், ‘ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வாகனங்களில் சுற்றுவோரை போலீஸார் இன்று முதல் ரவுண்ட் கட்ட தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஊரடங்கு மேலும் கடுமையாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தனியாக செயல்படுகிற மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் ஆகியவை இனி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் 10 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே இந்தக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கடைகளில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அரசு நிபந்தனை விதித்துள்ளது. இக்கடைகள் தவிர வேறு எந்தக் கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை
.
ஏற்கனவே தேநீர் கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை மே 17 வரை நடைமுறைக்கு வருகிறது.