தேர்தல் விதிமீறல்கள் குறித்து குவியும் புகார்கள்... கோடிக்கணக்கில் கிடப்பில் இருக்கும் வழக்குகள்...!
தேர்தல் ஆணையம் என்னதான் தேர்தல் விதிமீறல்கள் குறித்து வழக்குகளை பதிவு செய்தாலும், யார் மீதும் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தீவிரமடைந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலாக்கப்பட்டத்தில் இருந்தே ஏராளமான விதிமீறல் புகார்கள் குவிந்து வருகின்றன. பணப்பட்டுவாடா, பொதுக்கூட்டம், வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட சம்பவங்களின் போது விதிகளை மீறியதாக எவ்வித கட்சி பாகுபாடும் இன்றி வழக்குப்பதிவு செய்யப்படு வருகிறது.
விருதுநகரில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான், ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் விஸ்வநாதன், திருச்சியில் விதியை மீறி பிரச்சாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சரை அவதூறாக பேசிய திமுக எம்.பி.ஆ.ராசா உள்ளிட்டோர் மீது கட்சி பாகுபாடு இன்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஒரே நாளில் மட்டும் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக திமுக மீது 4 வழக்குகளும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீது 3 வழக்குகளும், அதிமுக மற்றும் அமமுக மீது தலா ஒரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்தும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையம் என்னதான் தேர்தல் விதிமீறல்கள் குறித்து வழக்குகளை பதிவு செய்தாலும், யார் மீதும் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக தேர்தல் விதிமீறல்கள் குறித்து மட்டும் 3.5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.