அழுகும் நிலையில் பயிர்கள்.. கதறும் விவசாயிகள்..! என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது அரசு?
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர்.
கடந்த 6 நாட்களாக நாகை, திருவாரூர் ஆகிய கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழ்வேளூர், தரங்கம்பாடி, நன்னிலம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியதால் விவசாயிகள் விவரிக்க முடியாத அளவிற்கு பாதிப்படைந்தனர். இந்த ஆண்டாவது விளைந்துவிடும் என்ற நம்பிக்கையில், குறுகிய கால பயிரான சம்பா சாகுபடி செய்திருந்தனர்.
விதைத்த சில நாட்களில் மழை இல்லாமல், பணம் கொடுத்து தண்ணீர் இறைத்து பயிரை வளர்த்துவந்துள்ளனர். பயிர் வளர்ந்துவரும் சமயத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து, பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாகை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கரி பரப்பிற்கும் மேலான சம்பா பயிர்கள் மூழ்கிவிட்டன. அதிகமான தண்ணீர் தேங்கியுள்ளதால் வடிக்க சிரமப்படும் விவசாயிகள், ஏற்கனவே 5 நாட்கள் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தண்ணீர் வடிய மேலும் 5 நாட்கள் ஆகும் என்பதால் கண்டிப்பாக பயிர்கள் அழுகிவிடும் என கண்ணீர் சிந்துகின்றனர்.
விதைத்த சமயத்தில் மழை இல்லாமல் பணம் கொடுத்து தண்ணீர் இறைத்து வளர்த்தெடுத்த பயிர்கள், இந்த கனமழையால் மூழ்கிவிட்டன.
நாகை மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.
வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே வயல்களுக்குள் தண்ணீர் தேங்கியதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் தண்ணீர் ஓடியிருக்கும். அப்படி செய்யாததால்தான் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டது என விவசாயிகள் கதறுகின்றனர்.
நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, மயிலாடுதுறை, கீழ்வேளூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், நன்னிலம் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கிவிட்டன.
கடந்த ஆண்டே வறட்சியால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், இந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
பயிர்கள் மூழ்கியதற்குக் காரணம் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததுதான் என விவசாயிகள் திட்டவட்டமாக குற்றம்சாட்டுகின்றனர்.