விவசாயிகளுக்காக முன்பு இருந்தது போல் மாற்றுங்கள்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்றும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் முன்பிருந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மற்றும் ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சருக்கும், 28-7-2021 அன்று எழுதியுள்ள கடிதத்தில், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மூன்பு இருந்தபடி 49.49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர். தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒரு முறைக்கும் மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலைநோக்குப் பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்றும், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டியிருந்து பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால் 2016-2017-ல் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு 2020-2021-ல் 1,918 கோடி ரூபாயாக அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது என்று குதிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து வரும் நிலையின் இந்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும் கடினமாகவும் உள்ளது என்றும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, -மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டனாத்தில் ஒன்றிய அரசு மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 4949:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.