ஒரே ஒரு தொகுதிக்காக மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என்று தி.மு.க முடிவு செய்துள்ளது. நாகை தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கவும் தி.மு.க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த கட்சியிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து பேசுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி, அந்த கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர்.

மாலை ஐந்தரை மணிவாக்கில் தொடங்கிய சந்திப்பு இரவு ஏழு மணிக்கு பிறகும் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி பா.ஜ.கவிற்கு எதிரான தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு குறித்து பேசியதாக குறிப்பிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் சொல்லிவிட்டு சுதாகர் ரெட்டி புறப்பட்டார். ஆனால் உண்மையில் ஒன்றரை மணி நேரம் உள்ளே தொகுதிப் பங்கீடு குறித்தே பேசப்பட்டதாக இரண்டு கட்சிகள் தரப்பில் இருந்தும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாகவும் நாகையுடன் திருப்பூர் தொகுதியும் தங்களுக்கு வேண்டும் என்று தி.மு.கவிடம் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஸ்டாலினோ திருப்பூர் தொகுதிக்கு வாய்ப்பில்லை என்றும் நாகை தொகுதியை மட்டுமே கொடுக்கும் நிலையில் தாங்கள் இருப்பதாக தெளிவாக கூறியுள்ளார்.

ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் தி.மு.க தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவே சொல்லப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் எந்த பதிலும் சொல்லாமல் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் புறப்பட்டதாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தென்காசி தொகுதியை மட்டுமே வழங்க முடியும் என்று தி.மு.க கூறிவிட்டதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.