எத்தனை கர்ணம் அடித்தாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது... தா.பாண்டியன் பொளேர்..!
தமிழகத்தில் பாஜக கர்ணம் அடித்தாலும் கால் ஊன்ற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் விடுதலை நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு தா.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2015 சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லியில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் வாங்காத கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக மத்திய பாஜக அரசு நியமித்தது. இவர் இங்கே வந்த பிறகு புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க தடையாக உள்ளார். எனவே, புதுச்சேரி ஆளுநரை வேறு மாநிலத்துக்கு அல்லது டெல்லிக்கு பிரதமர் மோடி அழைக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக கர்ணம் அடித்தாலும் கால் ஊன்ற முடியாது. பாஜக எந்த அணியை அமைத்தாலும் சரி, பாஜக ஆட்சியை விலை கொடுத்து வாங்கலாம் என்றாலும் சரி, அதெல்லாம் தமிழகத்தில் பலிக்காது. தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தின் பாஜகவின் வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அவர்கள் போகும் இடமெல்லாம் வரவேற்பு இருக்காது. அந்த அவமானத்தை அவர்களே சந்திக்கட்டும்” என்று தா.பாண்டியன் தெரிவித்தார்.