நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த வாரிசு அரசியல் தமிழகத்தில் நடக்கிறது. வாரிசு ஆட்சி  என்பது ஜனநாயகம், ஜனநாயக விழுமியங்களுக்கெல்லாம் சவாலாக உள்ளது. இங்கு குடும்பத்துக்கு சேவை செய்கிறார்கள். மக்களுக்கோ மாநிலத்துக்கோ தேசத்துக்கோ அல்ல.

திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. ஊழலும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவதுதான் பாஜகவின் இலக்கு என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழாவில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜே.பி. நட்டா திரு நெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு மாவட்டங்களில் பாஜக கட்சி அலுவலகங்களை காணொலி காட்சி மூலம் ஜே.பி. நட்டா திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா பேசுகையில், “பழமையான கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டு தமிழ். எனவே, தமிழகத்துக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளைக் கொண்ட கலாச்சாரத்தின் அடையாளமாக தமிழகத்துக்கு வந்துள்ளேன். திருவள்ளூவர் வாழ்ந்த பூமியை நான் வணங்குகிறேன்.

சில கட்சிகள் தலைவர் வீடுகளில்தான் செயல்படும். அந்தத் தலைவர்கள் போனால் கட்சியே காணாமல் போய்விடும். ஆனால், பாஜகவில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், குறிக்கோளும் கட்சியும் எப்போதும் நிலைத்திருக்கும். அதன் அடிப்படையில் 720 கட்சி அலுவலகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 473 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் இன்று 4 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 12 அலுவலகங்கள் தமிழகத்தில் விரைவில் திறக்கப்படும். இது அலுவலகம் என்று எண்ண வேண்டாம். இது பணிமனை. 

திமுக ஆட்சி என்பது ஊழல் நிறைந்தது. ஊழலும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இது ஒரு குடும்ப ஆட்சி. திமுகவில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவராக முடியும். ஆனால், பாஜகவில் மட்டுமே எளிமையான பின்னணி உடையவர்கள்கூட முன்னேறவும் தலைவர்களாகவும் ஆக முடியும். சமுதாயத்தில் விளிம்பில் உள்ளவர்களுக்கு பாஜக பாடுபடுகிறது. அதனால்தான், வங்கி கணக்குகள், உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா என பல திட்டங்களில் பொதுமக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள்.

நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த வாரிசு அரசியல் தமிழகத்தில் நடக்கிறது. வாரிசு ஆட்சி என்பது ஜனநாயகம், ஜனநாயக விழுமியங்களுக்கெல்லாம் சவாலாக உள்ளது. இங்கு குடும்பத்துக்கு சேவை செய்கிறார்கள். மக்களுக்கோ மாநிலத்துக்கோ தேசத்துக்கோ அல்ல. ஆனால், பாஜகவில் மட்டும்தான் மக்கள், மாநிலம் மற்றும் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுவதுதான் பாஜகவின் இலக்கு” என்று ஜே.பி. நட்டா பேசினார்.