corporate company try to enter into tamilnadu through rajinikanth

தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளாக கருத்தப்பட்டவர்களில் ஜெயலலிதா இறந்து விட்டார். கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்.

இதுவே சரியான தருணம் என்று, ரஜினி அரசியலில் கால் பதிக்க நாள் குறித்து கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கிருக்கும் சிலரே, போதுமான அளவு அரசியல் ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, சில பன்னாட்டு நிறுவனங்களும், மத்திய அரசின் செல்வாக்கு பெற்ற நிறுவனங்களும், ரஜினியை பயன்படுத்தி, தமிழகத்தின் இயற்கை வளங்களை சூறையாட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மணல், தாது பொருட்கள், நிலங்கள் உள்ளிட்டவற்றை சூறையாட திட்டமிட்டுள்ள அந்த நிறுவனங்கள், தற்போது, ரஜினியின் அரசியல் தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.

காலா பட ஷூட்டிங்குக்காக மும்பை சென்றுள்ள ரஜினி, அங்கு பாஜக தலைவர் அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அவர்கள் இருவரது மார்க்கமாக, சில பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களுக்கு வேண்டப்பட்ட இந்திய நிறுவனங்களும், தமிழகத்தில் கால் பதிக்கும் பணிகளை இப்போதே தொடங்கி விட்டன.

ஏற்கனவே, வெளிநாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம், எந்த விளம்பரமும் இல்லாமல், ரஜினியை வைத்து தமிழகத்தில் ஒரு சேவை நிறுவனத்தை தொடங்கி விட்டது.

இந்நிலையில், மற்ற நிறுவனங்களும், அமித் ஷா மற்றும் நிதின் கட்கரி மூலமாக ரஜினியை வளைத்து விட்டன என்று கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, ரஜினி பிறப்பால் மராட்டியர் என்றாலும், கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். அதனால், அங்குள்ள சில நிறுவனங்களும், அரசியல் வாதிகள் மூலமாக ரஜினியை வளைக்க திட்டமிட்டிருந்தன.

ஆனால், மராட்டிய நிறுவனங்கள், கர்நாடக நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியதாலும், ரஜினி வீட்டில் வீர சிவாஜி படம் இருப்பதாக நிதின் கட்கரி கூறியதாலும், ரஜினிக்கு தற்போது கர்நாடகாவில் எதிர்ப்பு வெடித்துள்ளது.

ரஜினியை பொறுத்தவரை, கர்நாடகாவை சேர்ந்த மராட்டியர். அவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து புகழ் பெற்றதால், தன்னை தானே பச்சை தமிழனாக அறிவித்து கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய ஆசைப்படுகிறார்.

ஆனால், அவர் தங்களுக்கே சொந்தம் என கர்நாடகாவும், மகாராஷ்டிராவும் உரிமை கொண்டாடுவதால், அந்த இரு மாநிலத்தவருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அந்த இரு தரப்புமே, தங்கள் மாநிலத்திற்கு வந்து அரசியல் நடத்துங்கள் என்று ரஜினியை அழைக்கவில்லை. தமிழகத்தில் அரசியல் நடத்தவே வற்புறுத்துகின்றன.

இந்நிலையில்தான், இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள், தமிழனை தமிழனே ஆளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழர்கள், தங்களுக்கான தலைவர்களை தேர்வு செய்வதில் மட்டும் கோட்டை விட்டு விடுகின்றனர்.

அதனால்தான், தமிழகம், வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறி விட்டது என்று தமிழ் தேசிய வாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.