கொரோனாவை மாநில அரசுகள்தான் கட்டுப்படுத்தணும்... அது அவுங்க பொறுப்பு.. மத்திய அமைச்சர் அடடே விளக்கம்..!
கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை எகிறி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று மாநில அரசுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. இதையத்து இந்த விவகாரத்தில், மத்திய அரசு உதவ வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “மாநில அரசுகள் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆக்ஸிஜன் தேவையை எப்படி கையாள்வது மிக முக்கியமோ அதை முறையாக விநியோகிப்பதும் மிகவும் முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளுடைய பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.” என்று பியூஸ் கோயல் பதிவிட்டுள்ளார்.