முதல்வரின் சகோதரர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. குறிப்பாக கேரளா, தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 136 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 10.94 லட்சமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி நாளை முதல் வரும் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது.
பின்னர், கொல்கத்தாவில் உள்ள மெடிகா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடலுக்கு கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.