அரசியலில் சுனாமியே அடித்தாலும்....’ஜில்ல்லுன்னு ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் கிடைக்குமா?’ என்று கூல் முகம் காட்டி, தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த டி.டி.வி. தினகரனுக்கே வியர்த்துக் கொட்ட வைத்துவிட்டது இன்றைய கோர்ட் காரசாரம். 


அரசியலில் சுனாமியே அடித்தாலும்....’ஜில்ல்லுன்னு ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் கிடைக்குமா?’ என்று கூல் முகம் காட்டி, தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த டி.டி.வி. தினகரனுக்கே வியர்த்துக் கொட்ட வைத்துவிட்டது இன்றைய கோர்ட் காரசாரம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அ.ம.மு.க.வால் தேர்தலில் போட்டியிட முடியுமா? எனும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டுவார்கள் போலிருக்கிறதே!....என்றெல்லாம் புலம்புமளவுக்கு தினகரனை திணறி உட்கார வைத்துவிட்டார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேர்தலில் பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஏக சூட்டுடன் நடந்திருக்கிறது. 

இதில் தினகரன் தனது கட்சியை பதிவு செய்யாததை சுட்டிக்காட்டிய நீதிபதி ‘பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரதிநிதித்துவ சட்டப்படி முரணானது. பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுசின்னத்தை ஒதுக்க முடியும்?’ என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு “கட்சியை பதிவு செய்ய தயார். ஆனால் அதற்கு நேரமில்லை. மேலும், இவ்வளவு நாட்கள் கட்சியை பதிவு செய்யாததற்கு காரணம்...தனியாக கட்சியை பதிவு செய்தால், இரட்டை இலை சின்னத்தை கோருவதற்கான தகுதியை விட்டுக் கொடுக்க நேரிடும்.” என்று தினகரன் தரப்பு பதிலளித்திருக்கிறது. 

ஆனால் அப்போதும் விடாத நீதிபதி “அ.தி.மு.க.வின் அணியாக தினகரன் அணி தன்னை நினைத்துக் கொண்டு வாய்ப்பை தவறவிட்டுள்ளது. ஒரு சின்னத்தால் பிரபலமான அவருக்கு, வேறு சின்னம் வழங்குவது அவரது அரசியலுக்கு முடிவுரையாக அமையும்.” என்று நறுக்கென ஒரு பஞ்ச் வைத்தார். இதில் நொந்து போன அ.ம.மு.க. தரப்பு “தினகரன் தனி நபர் அல்ல. அவருக்கு இருபது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. 

தினகரனுக்கு பொதுவான ஒரு சின்னத்தை நாற்பது நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் ஒதுக்கிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்துவிட்டு காத்திருக்கிறது. வேட்பு மனு தாக்கல் முடியும் நாளில் அ.ம.மு.க.வுக்கு வந்து சேர்ந்திருக்கும் இந்த ஆப்பை நினைத்து அ.தி.மு.க. பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடுகிறது.