18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லுமா.? செல்லாதா..? நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பால் சிக்கல்
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் செல்லாது என நீதிபதி சுந்தரும் முரண்பட்ட தீர்ப்பளித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்துகொண்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் பரிந்துரைத்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்றவர்கள் விளக்கம் அளிக்காததால், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார்.
தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். ஆனால், நீதிபதி சுந்தர், தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். ஒரே அமர்வில் உள்ள இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார்.