திமுக ஆட்சியில் சதி நடக்கிறது... குமுறும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்..!
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு வாகனம் கூட கொடுக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு வாகனம் கூட கொடுக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தற்காலிகமான இடத்தில் இயங்கி வருகிறது.
எந்த இடத்தில் பல்கலைகழகம் இயங்குகிறதோ அங்குதான் அதிகாரம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடைபெறுகிறது. திருவள்ளுவர் பல்கலை கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர்கள் உயர்கல்வி படிக்க திருவள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம், அம்மா கிளினிக் அடித்து நொறுக்கப்பட்ட போது கடந்த ஆட்சியில் திட்டங்கள் அப்படியே இருக்கும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது அம்மா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். மேலும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு வாகனம் கூட கொடுக்கப்படவில்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.