வியாபம் ஊழல் மல்லையா பற்றி அமெரிக்காவில் ஏன் பேசவில்லை? மோடிக்கு காங்கிரஸ் கேள்வி’...
என்னுடைய ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சிறு ஊழல் கூட இல்லை என்று அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள், வியாபம் ஊழல், லலித் மோடி, விஜய் மல்லையா குறித்தும் பேசி இருக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஊழலை இல்லை
அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, விர்ஜினியாவில் இந்தியர்கள் மத்தியில் பேசும்போது, “ என்னுடைய 3 ஆண்டுகால ஆட்சியில் சிறிய ஊழல் கறை கூட இல்லை. கடந்த காலங்களில் அரசுகள் தோல்வி அடைந்து வெளியே ஊழல்தான் காரணம்’’ எனத் தெரிவித்தார்.
கேள்வி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
பா.ஜனதா கொள்கையா?
பிரதமர் மோடி 64-வது முறையாக வௌிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வௌியுறவுக் கொள்கை என்பது, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதும், பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதும், வாய்ஜாலம் பேசுவதும்தான்.அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை தங்களுடையது என்று உரிமை கொண்டாடுவதும் அந்த கட்சியின் அரசியல் தான்.
காங்கிரஸ் சாதனை
வேம்பு பூசப்பட்ட யூரியாவை காங்கிரஸ் அரசு கடந்த 2011ம் ஆண்டு சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தியது, நேரடி மானியத் திட்டத்தையும் 2013ம் ஆண்டு காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்தது. ஆனால், அனைத்தையும் தங்களின் சாதனையாக மோடி அறிவித்துக்கொண்டார்.
நாட்டுக்கு தலைவரா?
பிரதமர் மோடி நீங்கள் நாட்டின் பிரதமர், பாஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தலைவர் அல்ல. நாட்டின் நலன் குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் நீங்கள் பேச வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது.
வியாபம் ஊழல்
அமெரிக்காவில் பேசும்போது, கடந்த 3 ஆண்டுகளில் ஊழலை நடக்கவில்லை என மோடி கூறியிருந்தார். ஊழலைப் பற்றி மோடி பேசும்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் குறித்தும், குஜராத்தில் நடந்த ஜி.எஸ்.பி.சி. ஊழல், சட்டீஸ்கரில் நடந்த ரேஷன் கடை ஊழல் குறித்தும் பேசி இருக்க வேண்டும்.
மல்லையா பெயர்
சஹாரா நிறுவன அதிபரின் டைரியில் உங்களின் பெயர் இருந்ததே அதை குறிப்பிட்டு இருக்க வேண்டும். குஜராத்தில் அனர் படேலின் நில ஊழல், லலித் மோடி, விஜய் மல்லையாவை சுதந்திரமாக தப்பவிட்டது குறித்தும் பேசி இருக்க வேண்டும்.
துணிவு இருந்ததா?
அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மோடி, பாகிஸ்தானுக்கு 74.3 கோடி டாலர் நிதி உதவி அளித்தது குறித்து ஏன் கேட்கவில்லை?. உலகையே அச்சுறுத்தும் பருவநிலை மாறுபாடு குறித்து இந்தியாவின் கவலைகளை தெரிவித்தாரா?, இந்த கேள்விகளை அதிபர் டிரம்பிடம் கேட்க மோடிக்கு துணிவு இருந்ததா?.
இவ்வாறு அவர் பேசினார்.