சந்தி சிரிக்கும் சத்யமூர்த்தி பவன் - மகளிர் காங்கிரஸ் தலைவிக்கு அடி உதை
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சிவாஜியிடம் கேட்ப்பது போல், பிரிக்க முடியாதது எதுவோ என்றால், அது காங்கிரஸ் கட்சியும் குடுமி பிடி சண்டையும்தான் என்று ஓபனாகவே சொல்லலாம்.
அந்த அளவுக்கு காங்கிரசில் கோஷ்டி பூசல் மிகவும் பிரபலம். அதை மீண்டும் நிரூபிக்கும் அளவுக்கு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் இரண்டு பேர் ஒருவர் முடியை ஒருவர் இழுத்து சண்டை போட்ட சம்பவம், மீண்டும் சத்தியமூர்த்தி பவனை இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளரான ஹசீனா சையத் பரிந்துரையின் பேரில், திருவள்ளூர் மகளிர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த கௌரி கோபால் என்பவர் அண்மையில் நீக்கப்பட்டுள்ளார்.
இதை, இன்று சத்திய மூர்த்தி பவனில் இருந்த ஹசீனா சையத் கிண்டலாக கூறி இருக்கிறார். அதை கேட்டு ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், உடனே அருகில் இருந்த, ஹசீனா சயத்தின் தலைமுடியை பிடித்து இழுத்து நான்கு மிதி மிதித்து இருக்கிறார்.
அடி தாங்க முடியாமல், அலறி அடித்துக்கொண்டு ஓடிய ஹசீனா சையத், வெளியில் நின்று கொண்டிருந்த தமது கணவரிடம் சென்று விஷயத்தை கூறி இருக்கிறார்.
மனைவி தாக்கப்பட்ட விவரம் அறிந்து ஆத்திரம் அடைந்த சையத், சத்திய மூர்த்திபவனின் உள்ளே சென்று, கௌரி கோபாலை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதியின் வைர விழாவுக்காக சென்னை வந்திருந்த, ராகுல் காந்தி, சத்திய மூர்த்தி பவன் வந்து நிர்வாகிகளை சந்தித்து, இரண்டு நாள் ஆவதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று இருக்கிறது. அது, ஈ வி கே எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், திருநாவுக்கரசர் என பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்பது தெரியும்.
அதேபோல், மகிளா காங்கிரசில், நக்மா மற்றும் விஜயதரணி கோஷ்டியினர், தொடர்ந்து குஷ்புவை வறுத்தெடுத்து வருவதும் அறிந்ததே.
இந்நிலையில், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர், தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தலைமுடியை பிடித்து அடித்து கொள்ளும் அளவுக்கு காங்கிரசின் நிலை மாறியுள்ளது..மூத்த தலைவர்களை கவலை அடைய வைத்துள்ளது.