நோட்டாவால் பறிபோன 15 தொகுதிகள்!! கதிகலங்கும் அரசியல்வாதிகள்!!!
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப் பேரவை வாக்குப்பதிவு முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத்தில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் நோட்டா வாக்குகளால் ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது.
தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்னத்தில் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தலாம்.
அண்மைக்காலமாக நோட்டாவில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆளும் கட்சி மீதாக அதிருப்தி, எதிர்கட்சிகள் மீதான அவநம்பிக்கை காரணமாக நோட்டா வாக்குகள் கொஞ்சம், கொஞ்சமாக கூடி வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 615 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் நோட்டாவிற்கு 1.8 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. இதன்மூலம் அதிக வாக்குகளை பெற்ற மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நோட்டா பெற்றுள்ளது.
இமாச்சல பிரதேச தேர்தலிலும் சுமார் 34 ஆயிரத்து 232 வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், 16 தொகுதிகளில் 3000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. இந்த 16 தொகுதிளிலும் பாஜகவை வீழ்த்த காங்கிரசுக்கு தேவையான வாக்குகளை காட்டிலும் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் அதிகம்.
ஒரு வேளை நோட்டா வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருந்தால் இந்நேரம் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கும்.
இதே போல் சோட்டா உதய்பூர், தசாடா, மான்சா,லூனாவாடா உள்ளிட்ட 15 தொகுதிகளில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளால் பாஜக வெற்றியை பறிகொடுத்துள்ளது
அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக நோட்டா அமையாது என்றாலும், குறைவான வாக்கு வித்தியாத்தில் வெற்றி தோல்வி ஏற்படும் தொகுதிகளில் நோட்டாவின் பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்துள்ளது.
அண்மைக்காலமாக நோட்டாவுக்கு வாக்களிப்பது அதிகரித்து வருவதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கதிகலங்கிப் போயுள்ளன.