நள்ளிரவில் ஹைதராபாத்துக்கு கடத்தப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்…. குதிரைப் பேரத்தை தடுக்க குமாரசாமியின் அதிரடி வீயூகம்….
பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் நள்ளிரவில் ஹைதிராபாத் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்புக்கிடையே பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
ஆனால் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க கோரிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்க தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து எடியூரப்பா நேற்று கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதே நேரத்தில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிருபிக்க 15 நாட்கள் கவர்னர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவோ அல்லது ராஜினாமா செய்ய வைக்கவோ பாஜக முயற்சி செய்யும் என்பதால். இந்த எம்எல்ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சியும், குமாரசாமியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈகிள்டன் என்ற ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களும் இரவோடு இரவாக பேருந்து மூலம் ஹைதிராபாத் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 3 பேரைத்தவிர 75 எம்எல்ஏக்களும், மஜத கட்சியைச் சேர்ந்த 37 எம்எல்ஏக்களும் பலத்த பாதுகாப்புடன் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.