confussion in Gujarat cabinet

குஜராத் துணை முதல்வராக இருக்கும் நிதின் படேலுக்கு நிதி அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யாததால், அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக பா.ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே படேல் சமூகத்தின் முக்கியத் தலைவர் ஹர்திக் படேல், அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு நிதின் படேலுக்கு அழைப்பு விடுத்துள்ளதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜனதா வெற்றி

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 182 இடங்களில் 99 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதிருப்தி

இந்நிலையில், துணை முதல்வர் நிதின் படேலுக்கு அமைச்சகப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், அவர் இன்னும் அலுவலகத்துக்கு வந்து பொறுப்புக்களை ஏற்கவில்லை. துணை முதல்வராக இருந்தும் தனக்கு ஒதுக்கப்பட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகளால் மிகுந்த அதிருப்தியில் அவர் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிளவு

கடந்த அரசில் இவர் வசம் இருந்த நிதி, பெட்ரோகெமிக்கல், நகர ேமம்பாடு ஆகிய பறிக்கப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அங்கு பிளவு ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.

புதிய அரசில் துணை முதல்வருக்கு சாலை மற்றும் கட்டிடம், நர்மதா, சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் மூலதன திட்டம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சமாதானம்

இதையடுத்து, கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்தில் கூறி நிதின் படேலை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபடக் கோரிகேட்டுக்கொண்டுள்ளனர்.

ரூபானியுடன் கருத்து வேறுபாடு?

முதல்வர் விஜய் ரூபானியின் இல்லத்தில், துணை முதல்வர் நிதின் படேல், மாநில பா.ஜனதா தலைவர் ஜிது வாகினி ஆகியோர் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அமைச்சகப் பொறுப்புகளை ஒதுக்குவது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

ஆனால், அமைச்சகப் பொறுப்புகள் அனைத்தும் மத்திய தலைமையிடம் கலந்து ஆலோசனை செய்து ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த துறைகள் தனக்கு ஒதுக்கப்பட்டதில்தான் நிதின் படேல் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஒற்றுமையாக இருக்கிறோம்

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ நிதின்படேல் தனக்கு நிதி அமைச்சகம் ஒதுக்கப்படவில்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார். துணை முதல்வராக இருந்தும் கூட தனக்கு முக்கியத் துறைகள் கிடைக்களில்லை. குறிப்பாக உள்துறை, பொதுநிர்வாகம், தொழில்துறை,சுரங்கம், நிதி, நகரமேம்பாடு, வருவாய் ஆகிய ஏதும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.

ஆனால், குஜராத் அரசில் எந்த குழப்பமும் இல்லை. தங்களுக்குள் வேறுபாடு ஏதும் கிடையாது என்று முதல்வர் விஜய் ரூபானியும், துணை முதல்வர் நிதின் படேலும், பா.ஜனதா தலைவர் வாகனியும் ஊடகங்களிடம் விளக்கம் அளித்தனர்.